Tuesday, January 8, 2008

வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குது!

அழகப்பன் அவர்களுடைய யூதம் என்றொரு மத்தியகிழக்குப் பார்ப்பனீயம் பதிவைப் படித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சில எண்ணங்களைப் பதிவு செய்கிறேன். நடக்க இயலாத அல்லது நம்ப இயலாத ஒரு நிகழ்வைக் குறித்துத் தான் நம்மில் சிலர் இப்பதிவின் தலைப்பைச் சொல்லுவர். நான் சில நிகழ்வுகளைச் சொல்கிறேன். வெள்ளைக் காகம் என்ன வெள்ளை யானையே மல்லாக்கப் பறக்கும்! அப்படித் தான் நாம் நம்பவைக்கப் பட்டிருக்கிறோம்!

1. இஸ்ரேல் என்ற நாடு மீண்டும் மீண்டும் அதன் எதிரிகளால் தாக்கப்படுகிறது; இஸ்ரேல் செய்வது வெறும் தற்காப்பு மட்டுமே!

இஸ்ரேலின் வரலாற்றில் அது தாக்கப்பட்டதைவிட அது தாக்கிய நிகழ்வுகளே பெரும்பான்மை. 1956-ல் சினாய் தீபகற்பத்தையும் காஸாவையும் தாக்கி அபகரித்துக் கொண்டது இஸ்ரேல். பின்னர் ஐசன்ஹோவர் தலையீட்டாலேயே பின்வாங்கியது. 1967-ல் தான் தாக்கப்பட்டதாகக்கூறி எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளைத் தாக்கியது. ஆறுநாள்போர் முடிந்தவுடன் தான் தாக்கப்படும் முன்னதாகவே தாக்குதல் தொடுத்ததாக இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. உண்மையில் நீண்டநாள் முன்பே முடிவு செய்யப்பட்ட தாக்குதல் திட்டம் தான் இது எனப் பின்னர் தெரியவந்தது. 1978-ல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கக் கப்பல் USS லிபர்ட்டியையும் விட்டுவைக்கவில்லை. அது US கப்பல் எனத் தெரிந்தே தான் தாக்கியது. (The Israeli military court of inquiry later acknowledged that their naval headquarters knew at least three hours before the attack that the ship was "an electromagnetic audio-surveillance ship of the U.S. Navy")

இது குறித்த BBC ஆவணப்படம் காண இங்கு சொடுக்குங்கள்.

(குறிப்பு: அரபுநாடுகள் புனிதர்கள் என வாதிடுவதல்ல எனது நோக்கம்; இஸ்ரேல் தற்காப்பிற்காகத் தாக்குதல் தொடுக்கிறது என்ற பொய்யை உடைப்பதே பிரதானம்)

2. இஸ்ரேல் அமைதியை மட்டுமே நாடுகிறது; ஒவ்வொரு முறையும் அதன் அமைதி முயற்சிகள் தோல்வி அடைகின்றன.

நப்லுஸ், காஸா என்ற பகுதிகள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்குப் பொழுதுபோகாவிட்டால் ராணுவ டேங்குகளை ஓட்டி கல்லெறியும் சிறுவர்களைச் சுட்டுப் பழகும் இடமாகி இருக்கின்றன. அதிகத் தொலைவு போக வேண்டாம். மிகச் சமீபத்தில் அன்னாபொலிஸ் என்ற இடத்தில் இஸ்ரேல் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் தண்ணீரில் எழுதிய கதைகள் ஆகி உள்ளன.

3. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் இருப்பிற்கான உரிமையை ஏற்பதில்லை.

ஆஸ்லோவில் நடந்த அமைதி ஒப்பந்தத்தில் யாசர் அரபாத் இஸ்ரேலின் இருப்பிற்கான உரிமையை ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இஸ்ரேல் என்று மேற்கத்திய ஆதிக்க உலகம் வலிந்து திணித்து உருவாக்கிய இடத்தின் குடிமக்கள் என அறியப்பட்டவர்களுக்கு கடவுச்சீட்டு உள்ளது. இன்றுவரை பாலஸ்தீனம் என்று சொல்லப்படும் இடத்தின் குடிமக்கள் எவருக்காவது கடவுச்சீட்டு இருக்கிறதா?

சரி இன்றுவரை பாலஸ்தீனம் என்றொரு நாட்டின் இருப்பை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளதா?

4. இன்றைய இஸ்ரேல் என அறியப்படும் இடங்களின் பூர்வகுடிகள் அங்குத் திரும்பக்கூடாது; அது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும்.

இன்றைய இஸ்ரேல் என்ற பகுதிக்குத் திரும்ப ஜியோனிஸ்டுளுக்கு உரிமையை யார் கொடுத்தார்? யார் அப்பன் வீட்டுச் சொத்து அது?

5. பாலஸ்தீனர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே!

இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அங்கிருந்த பாலஸ்தீனர்களைப் பலவந்தமாக விரட்டியது யார்? அவர்களை விரட்ட அரசப் பயங்கரவாதத்தைப் பிரயோகித்தது யார்? கூட்டம் கூட்டமாக மக்களைக் கொல்வது, அவர்களை அச்சுறுத்துவது, விரட்டுவது இவை எல்லாமே இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைகள் என நம்பித் தொலைப்போம்.

6. எங்கிருந்தோ வந்திருந்தாலும் அவ்வாறு வந்த நாங்கள் பாலஸ்தீனர்களை அமைதியாக வாழ அனுமதிக்கிறோம்;

ஒரு ஊரில் ஒரு ரவுடி இருந்தானாம்; அவன் இன்னொரு பெரிய ரவுடி உதவியோடு ஒருத்தர் பண்ணையில் வலுக்கட்டாயமாக நுழைந்து அந்த பண்ணை முதலாளியை வெளியே விரட்டிவிட்டனராம். என்ன இது நியாயம் என்று கேட்டவரிடம், இங்கே பார்; அமைதியாக ஓரமாக அவுட் ஹவுசில் இருந்தால் இரு; இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று சொன்னானாம். ஆஹா இந்த ரவுடி அல்லவோ அமைதிவிரும்பி!

இப்போதைக்கு இவை மட்டும், இன்னும் தோன்றினால் எழுதுகிறேன்.

Thursday, January 3, 2008

ஹஜ் பயணத்தில் உயிரிழப்புகள்!

பதிவர் கோவி கண்ணன் அவர்கள் புனிதத் தலங்களுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பலர் அப்புனிதத் தலங்களில் இருக்கும் சரியான வசதிக் குறைவுகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆதங்கப்பட்டு ஒரு பதிவிட்டிருக்கிறார்.



நியாயமான கவலை தான். முஸ்லிம்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது தம்மால் இயன்றால் மட்டும் இந்த ஹஜ் என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும். ஹஜ் புனிதக் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் கூடும் இடத்திற்குச் சென்று வந்த எவரும் அங்கு வசதிக்குறைவினால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகச் சொல்லமாட்டார்கள்.



அங்கு செல்லும் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் (கூட்ட நெரிசல்களைத் தவிர்ப்பது, கையோடு எடுத்துச் செல்லும் சுமைகளை எப்படிக் கையாளுவது, இன்ன பிற) என இப்போதெல்லாம் பயணம் துவங்கும் முன்பே பயிற்சி அளிக்கிறார்கள்.



கூட்ட நெரிசல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் சென்ற ஆண்டுகளில் ஹஜ் பயணிகளின் நடவடிக்கைகளாலேயே நிகழ்ந்தன. ஆனால் இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் ஹஜ் நிகழ்வு கழிந்தது.



சாதாரணமாக ஒவ்வோர் ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் மிகச்சிறு அளவிலானோர் இயற்கை மரணம் எய்துவதுண்டு. இது இயல்பானதே. உலக அளவில் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஏன் அதற்கு உட்பட்டவர்கள் கூட மாரடைப்பில் இறக்கின்றனர். ஜித்தாவில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகம் இந்தியாவில் இருந்து ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளுக்கு நிறைய சேவைகள் அளித்து வருகிறது. அவர்கள் இந்திய ஹஜ் கமிட்டி வழியாக வந்தாலும் அல்லது பிரைவேட் ஹஜ் ஆப்பரேட்டர்கள் மூலம் வந்தாலும். (இங்கு ஒரு குறிப்பு சொல்வது நலம். ஏதோ ஹஜ் மானியம் என்று சிலர் கூப்பாடு போடுகிறார்கள்; ஹஜ் கமிட்டியின் வழியாக வருபவர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலானோர் பிரைவேட் ஆப்பரேட்டர்கள் மூலமாக வருகின்றனர். இவர்களுக்கு ஹஜ் மானியம் எல்லாம் கிடையாது; அது பற்றி விரிவாகப் பிறிதொரு சமயத்தில்) இந்தியத் துணைத் தூதரகம் வருடாவருடம் ஹாஜிகளில் இறந்தோரின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும். இவ்வாண்டு இறந்த இந்திய ஹாஜிகள் 144 பேர் என அதன் தளம் சொல்கிறது.



தினமலர் என்றொரு உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கை உள்ளது. அதன் சார்பு என்ன அதன் பத்திரிகை (அ)தர்மம் என்ன என விளக்க வேண்டியதில்லை. நான் மேலே சொன்ன சாதாரண செய்தியை அது விவரிக்கும் விதம் பாருங்கள்: ஹஜ் பயணத்தில் 227 இந்தியர் மரணம்.



இதைப் படிக்கும் எவருக்கும் உடனடியாக என்ன தோன்றும்? வழக்கம் போல இந்த ஆண்டும் ஹஜ் பயணம் சென்று 227 இந்தியர்கள் காலி (காவிகளுக்கு இச்செய்தி மகிழ்ச்சி தரலாம்). இந்த செய்தியை முதுவை ஹிதாயத் என்பவர் சற்றுமுன் என்றொரு தளத்தில் அப்படியே வெட்டி ஒட்டுகிறார். செய்தியை உள்ளபடிக் கொடுக்க நினைத்திருந்தால் உள்ளடக்கத்தைப் படித்து அதன் தகவல்களைப் பரிசீலித்துத் தான் உள்ளதை உள்ளபடி தரவேண்டும். அதைவிடுத்து அப்படியே வெட்டி ஒட்டியது என்னாயிற்று?



கோவிகண்ணன் போன்ற மனித நேயர்கள் ஹஜ் பயணம் இறுதிப் பயணம் என்று விமர்சிக்கும் அளவுக்கு மேற்படி தகவல் கையாடல் வழிவகுத்து விட்டது.


குறிப்பு: நான் பதிவுலகிற்குப் புதியவனல்லன். பதிக்கும் அளவுக்குத் தேறியது இப்பொழுது தான்.